பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா (75) நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
சமீபத்தில், நடிகை பாவலா ஷியாமளாவிடம் போதிய பணம் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் ஆதரவின்றி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை ஷியாமலாவின் மருத்துவ செலவுகளுக்கு உதவ முன்வந்தார். அவரது உதவியால் ஷியாமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் நடிகையாக வலம் வந்த பாவலா ஷியாமளா, சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்புத் திறமைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர்.
குறிப்பாக, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் கோபிசந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'கோலிமார்' திரைப்படத்தில் பாவலா ஷியாமளா நடித்த நகைச்சுவைக் காட்சி, தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இழப்பு தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
