இந்தியாவில் சட்டவிரோதமாகப் பரப்பப்படும் திருட்டு திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலிகிராம் தளத்திற்கு மத்திய அரசு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை மீறல் என்பது இந்தியாவில் வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, அது 1957ம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952ம் ஆண்டின் சினிமாட்டோகிராப் சட்டத்தின்படி ஒரு கடுமையான கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை, டெலிகிராம் நிறுவனம் அரசு புகார் அளிக்கும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும் நீக்கும் வழக்கமான முறையைப் பின்பற்றி வந்தது. ஆனால், இனிமேல் அரசாங்கம் வந்து சொல்லும் வரை காத்திருக்காமல், டெலிகிராம் நிறுவனம் முன்கூட்டியே சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டறிந்து தானாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் வழங்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா மற்றும் ஓடிடி துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக, திருட்டு உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் மத்திய அரசு ஒரு வார காலத் தடையை விதித்திருந்தது. இருப்பினும், அந்தத் தடை காலாவதியான பிறகு, மீண்டும் இந்தியாவில் டெலிகிராம் செயலி செயல்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கெடு, சட்டவிரோத உள்ளடக்கப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.