மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் மிக விரைவில் அரங்கேற உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டி என இரண்டு அணிகளுக்கும் இனி ஒரே வீரரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இந்த புதிய கேப்டன் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இரு வகை கிரிக்கெட்டுக்கும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஐ.சி.சி., தொடர்களை கருத்தில் கொண்டு நீண்ட கால அடிப்படையில் இந்த ஒற்றை கேப்டன் முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஆட்டங்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மற்றும் ஐபிஎல் தொடரில் அவரது அபாரமான கேப்டன்சி ஆகியவை அவருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில், புதிதாக அறிவிக்கப்பட உள்ள டி20 அணியில் பல அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டி20 மற்றும் ஒருநாள் என இரண்டிற்கும் ஒரே கேப்டனை நியமிப்பதில் எங்கள் முழு கவனமும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தனது அணியை மிகுந்த தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பதவிக்கு அவரே முதல் தேர்வாக இருப்பார் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி முடிவு தற்போதைய டி20 அணி கேப்டனான சூர்யகுமார் யாதவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த போதிலும், அவரது பதவி பறிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2028 ஒலிம்பிக் தொடர் வரை கேப்டனாக தொடர அவர் ஆசைப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அதேபோல, மூத்த வீரர் ரோஹித் சர்மா விலகிய பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லும் தனது பதவியை இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது. இவர்கள் மட்டுமின்றி சஞ்சு சாம்சனின் பெயரும் கேப்டன் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணி அடுத்ததாக ஜூன் 6ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர்களுக்கான அணி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய கேப்டன் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.