தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி (MRP) விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒரே நேரத்தில் 277 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர டாஸ்மாக் நிர்வாகம் 5 கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் கட்டண வசூலைத் தடுப்பது, மதுபானக் கடைகளை முறைப்படுத்துவது மற்றும் வருவாய் இழப்பைத் தடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தவெக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். டாஸ்மாக் சங்கங்களின் மிரட்டல்களுக்கும் போராட்ட அழுத்தங்களுக்கும் அரசு பணியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்கங்கள் அரசை மிரட்டி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில், ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

