சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் அதற்கான செலவினங்களுக்காக நாள்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கமிஷன் செலவு ஏற்படுவதாகவும், கையுறை, சானிடைசர் போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கும் தினசரி ரூ.1,000 கூலி செலவாகிறது. சேமித்து வைக்க அறை வாடகைக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் தவிர, பணியாளர்களுக்கு சமூக பிரச்சனைகள், நோய் தொற்றுகள் மற்றும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், காலி பாட்டில்களை வாங்கி வைக்கவும் இடம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

