டாஸ்மாக் ஊழியர்களின் 25% ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கான ஊழிய உயர்வு என்பது டாஸ்மாக் வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த தொகுப்பூதிய அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏற்புடையதல்ல என்றும் சம்மேளனம் கூறியுள்ளது. ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், ஆவின் பாலகன்கள், நியாய விலை கடைகள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு தனது சொந்த நிறுவன ஊழியர்களிடம் இந்த பாகுபாடு காட்டுவது சரியல்ல என முந்தைய ஆட்சிக் காலங்களிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய திமுக அரசும், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தொகுப்பூதியத்தில் அவ்வப்போது சில உயர்வுகளை அறிவித்து, நவீன கொத்தடிமை முறையைத் தொடர்வதாக சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுசெய்ய உதவாது என்றும், இது ஊழியர்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரின் பேச்சில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே ஊதிய உயர்வு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதைக் கருத்தில் கொள்ளாமல், இந்த அரசும் பழைய முறையையே பின்பற்றுவது ஏற்புடையதல்ல என கடும் விமர்சனத்தை சம்மேளனம் முன்வைத்துள்ளது.
எனவே, அரசு இந்த தொகுப்பூதிய உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
