தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக, கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் படுகொலை, சென்னை சொத்து வரி உயர்வு, தேனி மேகமலை விவகாரம் போன்ற ஐந்து முக்கிய பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளன. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது ஒரு கோஷ்டி பூசல் என்று கூறியிருந்தார். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி இருப்பது படுகொலை ஆகும். இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்துவிட முடியாது. அரசின் அலட்சியத்தாலும், காவல்துறையின் பொறுப்பற்ற போக்காலும் இந்த கொலை நடந்துள்ளது," என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மாணவர் அமுதன் கொலை தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வரவழைத்தபோது, போதைப்பொருள் கும்பல் குறித்த தகவலை அமுதன் காவல்துறையினரிடம் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த தகவலை குற்றவாளிகளிடமே காவல்துறை பகிர்ந்து கொண்டதால் தான் அமுதனின் மரணம் நிகழ்ந்ததாக அவரது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னையிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் என்பவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக தட்டிக் கேட்டபோது, அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கி, பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் களத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம் படுனெல்லி கிராமத்தில் போதை கும்பலால் சந்துரு மற்றும் விக்கி ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, ஆகஸ்ட் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய்-மகள் இருவர் இரட்டைக் கொலையாக கொல்லப்பட்டனர். அதேபோல், ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் அம்பத்தூரில் வைதேகி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தாமரைச்செல்வி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி, கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வயதான பெண்மணி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார்.
இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாகவும், அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்ற சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

