தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தத் தீர்மானம், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' பாடப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றது.

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர். விவாதம் நிறைவடைந்த பின்னர், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், 'தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை' என வலியுறுத்தினார். மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல, அது நம்முடைய உயிர், நம்முடைய உணர்வு என்றும் அவர் குறிப்பிட்டார். தாயைப் போற்றுகிற தமிழ்நாட்டு மண்ணில், தமிழ்த்தாயை வாழ்த்தாமல் இருக்க முடியாது என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நாடகத்தில், தமிழ் மொழியைத் தமிழ்த்தாயாக உருவகப்படுத்தி, இந்தியத் துணைக்கண்டத்தின் நெற்றியில் திலகமாகத் திகழும் தமிழ்நாடு, அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் எனப் பாடியதை முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பது நமது பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் செயல் என்றும் அவர் கூறினார்.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 2026 ஜூலை 9 ஆம் தேதிய கடிதத்தில் மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் 1970களில் இருந்தே நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்' முதலில் பாடப்படுவது மரபு மற்றும் அரசாணைகள் வாயிலாகப் பின்பற்றப்பட்டு வருவதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, 'தமிழ்த்தாய் வாழ்த்து' தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது என்றும், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் பொது அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது என்றும் அவர் அறிவித்தார்.

முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் சார்பாக ஆதரவு தெரிவித்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானத்திற்கு அதிமுக சார்பாக ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரும் தங்கள் கட்சிகள் சார்பாக தனித்தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இறுதியாக, 'தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. தமிழ் ஒரு பண்பாடு. தமிழ் ஒரு நாகரிகம். தமிழ் நம்முடைய அடையாளம். தமிழ் நம்முடைய உயிர்' என்று கூறி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பது மாநில உரிமை என முதலமைச்சர் விஜய் மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version