திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தில், குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரேசன் (37 வயது) மற்றும் சோபியா (27 வயது) தம்பதியினர் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ (5 வயது) மற்றும் தன்னயா ஸ்ரீ (2 வயது) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான குமரேசனுக்கும், அவரது மனைவி சோபியாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் சோபியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். பின்னர் குமரேசன் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோபியா, வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த குமரேசன், வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது சோபியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சோபியாவை மீட்டனர். அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.