தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மத்திய மேற்குப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் முதல் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நீடிக்கிறது. இந்த வானிலை அமைப்புகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.

