தமிழகத்தில் தேநீர் மற்றும் காபி விலைகள் மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம், பதுக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் சர்க்கரை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை முன்பு ரூ40 முதல் ரூ50 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ65 முதல் ரூ75 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சர்க்கரை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு எத்தனால் பெட்ரோல் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துவதால் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறினாலும், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம் மற்றும் பதுக்கலே விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த திடீர் சர்க்கரை விலை உயர்வால், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் டீ, காபி விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருந்தது.
தற்போது சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை மீண்டும் ரூ20, ரூ25 வரை உயரக்கூடும் என்ற தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்க்கரையின் விலை மூட்டைக்குக் கணிசமாக உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேநீர் கடை உரிமையாளர்கள் டீ மற்றும் காபி விலையை மீண்டும் உயர்த்த பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த வாரம் வரை 50 கிலோ சர்க்கரை மூட்டை ரூ.2,150-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை திடீரென அதிகரித்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.67 முதல் ரூ.75 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை விலை உயர்வு என்பது டீ, காபி விற்பனையாளர்களை மட்டுமல்லாமல், இனிப்பு வகைகள் தயாரிப்போர், பேக்கரி உரிமையாளர்கள் என பலரையும் பாதிக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
