தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ஒரு புதிய விடியல் பிறந்துள்ளது என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எந்தவித இடையூறும் இன்றி தனது முழு உரையையும் சட்டமன்றத்தில் வாசிக்க முடிந்ததில் அவர் மனநிறைவு அடைந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஆளுநர் அர்லேகர் பதிவிட்டதாவது: 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார். முதல் முறையாக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இது மாநில அரசிற்கும், மக்களுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. இது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
ஜனநாயகத்தில், மக்கள் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதே ஒரு அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என ஆளுநர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இது மனதுக்கு நிறைவைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.