தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில், விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், வேளாண்மையைப் பேணிப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டெல்டா பகுதிகளில் 2,509 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படாத சூழலில், விவசாயிகளுக்கு 134.83 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 8,26,000 விவசாயிகள் பயனடைந்தனர்.
வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வினோத் கூறினார். எல் நினோ காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக முக்கிய அறிவிப்பாக, வேளாண் பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அறிவித்தார். இது விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பாசன பரப்பை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளின் இலவச மின்சாரத் தேவைகளுக்காக 7,432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 600 கோடி ரூபாய் மதிப்பில் மண்வள பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார். உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு தலா 4,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும், 4 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
