தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல், 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த த.வெ.க. அரசுக்கு, மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
முதல் கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தினரின் பட்டியலை உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. மேலும், 5 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்காளர் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு, வரும் 22-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.