கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், அபுதாபியில் இருந்து கொச்சி வந்த விமானத்தில், உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 170 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் எந்தவிதமான கடத்தல் பொருளும் இல்லை. இருப்பினும், சந்தேகத்தின் பேரில் அந்த தம்பதியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் தங்களது உள்ளாடைகளில் ரகசிய அறைகளை உருவாக்கி, அதில் பசை போன்ற வடிவத்தில் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.
இந்த சோதனையில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 170 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் இந்த தம்பதி தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரிப்னாஸ் ஹமீது (48) மற்றும் அவரது மனைவி ஜனாபர் காதர் (42) என்பது தெரியவந்தது. சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சுங்கத்துறையினர் அந்த தம்பதியை கைது செய்தனர். அவர்கள் இந்த தங்கத்தை எங்கு கடத்தி செல்ல முயன்றனர், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

