சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளியில் +2 பயின்று வந்த மாணவர் தனுஷ், போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டதால் 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் அமுதன், போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சென்னையிலும் இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்திருப்பது சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படுவதில் தமிழக அரசின் தோல்விக்குச் சான்றாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனையை அம்பலப்படுத்துபவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற ஒரு அச்சத்தை சமூகத்தில் இது ஏற்படுத்துகிறது என்றும், இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற இந்த அரசைப் பார்த்து சமூக விரோதிகளுக்கு எந்தவித பயமும் இல்லை என்பதே இதற்குக் காரணம். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அரசு கண்டுகொள்ளாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடானது என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு பரவலாக உள்ளதா, அதற்கான காரணங்கள் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், வன்முறை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆலோசனை (Counselling) வழங்கி, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வன்முறையின் தீமைகள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

