சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணியுடன் கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் வீரராக இணைந்தார். பின்னர், 2009ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அவரது நீண்டகாலப் பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 5 முறையும், சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை 2 முறையும் வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும், பிளெமிங்கின் பயிற்சியின் போது சிஎஸ்கே அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் திகழ்ந்தார்.
இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பெரும் சரிவை சந்தித்தது. இந்தச் சூழலை அடுத்து, பிளெமிங் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிளெமிங்கின் நீக்கம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில், 'எங்கள் அணியின் அடையாளத்தையும் இலக்குகளையும் வடிவமைப்பதில் பிளெமிங் முக்கிய பங்கு வகித்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள குறிப்பில், 'அணியை எப்போதும் முன்னிலைப்படுத்தும் கலாச்சாரத்தை பிளெமிங் உருவாக்கினார். அவரது தாக்கம் மைதானத்தைத் தாண்டியும் நீடிக்கும்' என்று பிளெமிங்கைப் புகழ்ந்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவது குறித்துப் பேசிய ஸ்டீபன் பிளெமிங், 'சிஎஸ்கே அணியுடன் பயணித்த இந்த 18 ஆண்டுகள் எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த கௌரவமாகும். கடினமான காலங்களைக் கடந்து மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடியுள்ளோம். சிஎஸ்கே அணி எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

