இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், டெஸ்ட் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் இந்தப் பொறுப்பை வகிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அவரது மோசமான ஆட்டம் மற்றும் கேப்டன்ஷி ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
வரும் செவ்வாய்க்கிழமை குவாஹாத்தியில் தேசிய தேர்வாளர்கள் கூடி, ஆப்கானிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்தக் கூட்டத்தில் ரிஷப் பண்ட்டின் எதிர்காலம் குறித்தும் முக்கிய விவாதங்கள் நடைபெறும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரையும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூன் 14, 17, 20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் தொடர்ந்து இரண்டு சீசன்களாக எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணி ஏழாவது இடத்தையும், நடப்பு 2026 சீசனில் 12 போட்டிகளில் வெறும் நான்கு வெற்றிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்தது. இது பண்ட்டின் தலைமைப் பண்பு மீதான பிசிசிஐயின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.
கடந்த நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் காயமடைந்ததால் பண்ட் அணியை வழிநடத்தினார். ஆனால், அவரது கேப்டன்சி செயல்பாடுகள் பிசிசிஐக்கு திருப்தி அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட்டின் பேட்டிங் திறமையை எந்தவித அழுத்தமும் இன்றி வெளிப்படுத்த, அவரது துணை கேப்டன் பதவி நீக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவரது பேட்டிங் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும், ஒருநாள் அணியில் பண்ட்டின் இடமும் கேள்விக்குறியாகியுள்ளது. 2025 தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால், அவரது சமீபத்திய மோசமான ஆட்டம் காரணமாக, கே.எல். ராகுல் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சிறந்த ஃபார்மில் உள்ள இஷான் கிஷனை தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

