தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவுகிறது. வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தவெக நிர்வாகி பாலா மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், 'மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். எனக்கு எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருகிறது. வீட்டை காலி செய்யச் சொல்லி டார்ச்சர் செய்கின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு எம்.எல்.ஏ.வே பொறுப்பு' என்று தெரிவித்தார்.
மேலும், 'காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. பலமுறை மனு கொடுத்தும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் என்னை மிகவும் அசிங்கமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். கட்சிக்காக இரவு 2 மணி வரை போஸ்டர் ஒட்டும்போதெல்லாம் நான் பணத்துக்காக அலைந்தவளாக தெரியவில்லையா? விஜய் அண்ணா எனக்கு நீதி வேண்டும். உரிய பாதுகாப்பு வேண்டும்' என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.