இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால், வைபவ் கடவுளின் பிள்ளை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியைப் பலரும் சச்சினுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், 'சச்சினையும் வைபவ்வையும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். வைபவ் சூர்யவன்ஷி கடவுளின் பிள்ளை என்று நான் நம்புகிறேன். சச்சினுக்கு நிகராக யாரும் வர முடியாது. அதனால் இந்த வெற்று ஒப்பீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
வைபவ்வின் திறமைகளைப் பாராட்டிய ஸ்ரீகாந்த், ஐபிஎல் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட் ஸ்விங், மணிக்கட்டின் வேகம் மற்றும் பேட்டிங் உத்திகள் பிரமிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் விட அவர் மிகவும் முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டுள்ளார். ஐபிஎல் 2026 குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய 96 ரன்கள் இன்னிங்ஸ் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அணி கடுமையான அழுத்தத்தில் இருந்த போது, விக்கெட்டை வீணாக்காமல் பொறுமையுடன் விளையாடி ஆட்டத்தை நகர்த்தினார். அவரிடம் ரன் குவிக்க வேண்டும், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பசி எப்போதும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் காத்துள்ளது என்றும், அவரை அவரது இயல்பான பாணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், யாருடனும் ஒப்பிடாமல் அவரை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், வைபவ் சூர்யவன்ஷி இலங்கை ஏ அணி வீரரை தள்ளி விட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.