இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கடனுதவியில் 2013ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையம், தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 209 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீன வங்கியிடமிருந்து கடன் பெற்று இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக போதிய பயன்பாடு இன்றி, உலகின் மிக வெறிச்சோடிய விமான நிலையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தற்போது, இந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து நடத்த ஜூன் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகிலேயே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகம் செயல்பட்டு வருகிறது.
ஹம்பாந்தோட்டா துறைமுகம் ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், மத்தள விமான நிலையத்தையும் குத்தகைக்கு விடும் இலங்கை அரசின் இந்த முடிவை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிராந்திய பாதுகாப்பில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.