தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நீண்ட காலமாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை, பொதுமக்களுக்கும் மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்தக் கடையை அதிரடியாக மூடப்பட்டு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் என்பது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் ஒரு முக்கிய மையமாகும். இதன் அருகிலேயே டாஸ்மாக் கடை இயங்கி வந்ததால், மதுப்பிரியர்களின் தொல்லைகளால் பெண்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்கத்தினருடன் இணைந்து அனைத்துத் தரப்பு மக்களும், வியாபாரிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், கடையை விரைவில் மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, அதிகாரிகள் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த டாஸ்மாக் கடையைப் பூட்டி, சீல் வைத்தனர்.
நீண்ட நாட்களாக தங்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்து வந்த மதுக்கடை தற்போது முழுமையாக மூடப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் திரு. விஜய்க்கு தெற்கு ஆத்தூர் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.