சமூகநீதி சர்வே அறிவிப்பு: முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் நன்றி

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். 46 ஆண்டு கால பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, சமூகநீதி வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்ற அரசின் கொள்கையை நிறைவேற்ற, சாதிவாரி கணக்கெடுப்புடன் இணைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைந்து முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றும், அதன் பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, அங்கு வாழும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் போன்ற தரவுகள் அவசியம். இவற்றைத் திரட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வே உதவும். 1980-ல் வன்னியர் சங்கம் நிறுவப்பட்டபோதே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் நினைவு கூர்ந்தார்.

கடந்த 46 ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்கள், மாநாடுகள், மக்கள் இயக்கங்கள் மூலம் இந்தக் கோரிக்கையை பாமக வலியுறுத்தி வந்துள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து சமூகநீதி சர்வேயின் அவசியத்தை வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது, பாமக கோரிய அதே 'சமூகநீதி சர்வே' என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பாமகவின் 46 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ளதுடன், சமூகநீதிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version