பார்வதியை சமாதானப்படுத்தும் சிவன்

சூரியனின் தேரை ஓட்டும் அருணன், உடல் குறைபாடு கொண்டவர். திருக்கயிலாய மலைக்குச் சென்று சிவ-பார்வதியை தரிசிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இந்த விருப்பத்தைச் சூரியனிடம் அருணன் தெரிவித்தபோது, சூரியன் அனுமதி மறுத்ததுடன், அருணனின் ஊனமான காலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், சூரியனின் ஒளியைப் பறித்தார்.

தனது தவறை உணர்ந்த சூரியன், கயிலாயம் வந்து சிவ-பார்வதியை வணங்கி சாப விமோசனம் வேண்டினார். அப்போது ஈசன், 'என்னையும், உமையவளையும் யானை மீது அமர்த்தி, மேக மண்டலத்தில் இருந்தபடி ஏழு மாதங்கள் பூஜித்து வா. உனக்கு விமோசனம் கிடைக்கும்' என்று அருளினார். அதன்படி பூஜித்து வந்த சூரியன், ஏழு மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே, ஈசனிடம் வந்து 'என்னுடைய சாபம் இன்னும் நீங்கவில்லையே' என்று முறையிட்டார்.

இதைக் கேட்டு கோபமடைந்த பார்வதிதேவி, 'உரிய காலம் வரும்வரை உன்னால் பொறுமையாக இருக்க முடியாதா?' என்று கேட்டு, சாபம் கொடுக்க முயன்றார். அப்போது சிவபெருமான், பார்வதிதேவியிடம், 'தேவி… நான் ஏற்கெனவே அளித்த சாபத்தால் சூரியன் ஒளியை இழந்துள்ளான். இதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது. இப்போது நீயும் சாபமிட்டால், உலக உயிர்களின் துயரம் மேலும் அதிகரிக்கும். எனவே அமைதியாக இரு' என்று கூறினார்.

இந்தத் தல வரலாற்றைக் கொண்ட ஆலயமாக, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமீயச்சூர் மேகநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் விமானத்தின் கீழே, தெற்குப் பகுதியில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையில் சிவ-பார்வதி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை 'ஷேத்திர புராணேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள். இதில் சிவபெருமான், தனது மனைவி பார்வதியின் முகவாயைப் பிடித்து, அமைதியாக இருக்கும்படி கொஞ்சிக் கேட்பது போன்ற சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அழகை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version