சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியின் தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை, சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது குறிப்பிட்டபடி செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த வாரம் திங்கட்கிழமை (ஜூலை 5) அன்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகாமல் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம், காலை மற்றும் மாலை இரு வேளையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. இருப்பினும், இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், வழக்கு பதிவில் தனது பெயரும், தனது சகோதரர் அசோக் குமார் பெயரும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தவெக பேரம் பேசிய வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதாவது, காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி காவல்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்பொழுது தவெக பேரம் பேசிய வழக்கு பதிவில் பெயர் இல்லாத நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு எப்படி ஆஜராக முடியும் என்றும் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நான் மக்கள் பிரதிநிதி என்பதாலும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தொழிலதிபர் என்பதாலும், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் என்னை கைது செய்யக்கூடாது என்றும், 35 (3) BNS என்ற பிரிவின் கீழ் எனக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மருத்துவ வசதி இருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
