தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தேவையற்றவை என்றும், அதேசமயம் அவர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பகைமை பாராட்டுவதையும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதையும், அரசியல் பழிவாங்கல் செய்வதையும் ஆட்சி நிர்வாகம் என்றும், மக்களுக்கான அரசியல் என்றும் கூறமுடியாது என்றும் அவர் சாடியுள்ளார். தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சில கருத்துக்கள் தேவையற்றவை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய மாண்பை மறந்து கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார். அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைது நடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் மேடைப் பேச்சுக்களுக்கெல்லாம் தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், தன் மீதும், தன் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனம், அவதூறு, ஆபாசத் தாக்குதல் என நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு கொடுத்த பிறகும், கைது செய்யாமல் விட்டிருப்பதன் காரணம் என்ன என்றும் அவர் வினவியுள்ளார். அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதால் தான் இந்த மெத்தனம் காட்டப்படுகிறதா என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்திற்குள் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைது செய்யும் காவல்துறையினர், தன்னைப்பற்றி அவதூறு பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன் என்று சீமான் ஆவேசமாகக் கேட்டுள்ளார். தன்னைப்பற்றி மேடையில் 'சீமான் பழைய சாமான்' என்று தரம்தாழ்ந்து பேசிய லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அப்படி பேசியதை ஊக்குவிக்கும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப் பதவி கொடுத்து அழகுபார்ப்பது முதல்வர் அவர்களின் நாகரீக அரசியலா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன் மீதும், தன் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை என்றும், ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை என்றும், ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுக ஆட்சியிலேயே பெற்றிருப்பதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் ஜனநாயக ஆட்சியா, இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கும்போது மனவலியைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும் என்று சீமான் வினவியுள்ளார். திருவைகுண்டம் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெக நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாகப் போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகிப்புத்தன்மையே ஜனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத் தவறானது என்றும், மேடைகளில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

