சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சீமான் கடும் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக கார், ஓட்டுநர், உதவியாளர் மற்றும் எரிபொருள் படி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து, தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள்படி என மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏற்கனவே 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்தமாக கார் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிதாக இலவச கார் வழங்க வேண்டிய அவசியம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு காரின் விலை குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் எனக்கொண்டால், 234 உறுப்பினர்களுக்கும் சுமார் ரூ.70 கோடி தேவைப்படும். மேலும், மாதம் ரூ.1 லட்சம் வீதம் 234 உறுப்பினர்களுக்கும் வழங்கினால் ஆண்டிற்கு சுமார் ரூ.28 கோடி கூடுதலாகத் தேவைப்படும். இதுமட்டுமல்லாமல், எரிபொருள், வாகனப் பராமரிப்பு என ஆண்டுக்கு பல நூறு கோடிகள் செலவாகும். இந்தப்பணம் அனைத்தும் மக்களின் வரிப்பணம்தானே? இது மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா? என சீமான் விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வாகனப்படி ரூ.25,000 உட்பட மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி கடன் வாங்கும் தமிழக அரசு, கூடுதலாக மாதம் ரூ.1 லட்சம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

'உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ, உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக் கொடுங்கள். மக்கள் பணத்தை ஏன் எடுக்கிறீர்கள்?' என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால், இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்துப் பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்க கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் முறையா? என்றும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் ரூ.10 கோடிக்கு தார்ப்பாய்களைத் தரும் த.வெ.க. அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு கார் வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவையா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைமுக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படும்போது, அதைச் சரிசெய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவையா? தேர்தல் பரப்புரையில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது? என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? அல்லது தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110-வது விதி என்ற பெயரில் புதிய திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது, ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version