விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை பண்டிகையை முன்னிட்டு, வருகிற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியின் பேரில், யானைகஜம் பகுதியில் குடிநீர் மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், திடீரென சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதனைக் கட்டுப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அசாதாரண சூழல் காரணமாக, பொதுமக்களின் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, நாளை சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், நாளை மறுநாள் ஆடி அமாவாசை அன்று, காட்டுத்தீயின் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளின் நிலவரத்தைப் பொறுத்து, பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

