2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியது குறித்து சஞ்சு சாம்சன் பல உள் விவகாரங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறியது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என்று கூறியுள்ள சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் தோனி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றியில் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், 11 சீசன்களாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 18 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டார். இந்த பரிமாற்றத்தில், பதிலுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றது.
தனது இந்த திடீர் முடிவு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், 'ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறியது உண்மையிலேயே பெரிய ரிஸ்க் தான். நமது முடிவை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டால், மீண்டும் பின்வாங்க முடியாது. நாம் விரும்பாத அணிக்குச் செல்ல நேரிடலாம் அல்லது ஏலத்தில் நிச்சயமற்ற நிலையைச் சந்திக்கலாம். இந்த முடிவுக்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன' என்று குறிப்பிட்டுள்ளார்.
'முதலாவதாக, 2025 சீசன் தான் ராஜஸ்தானில் எனது கடைசி சீசனாக இருக்கும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். இது அவசரப்பட்டு எடுத்த முடிவா என்று எனது குடும்பத்தினரும் மனைவியும் கேட்டனர். 2 முதல் 3 வாரங்கள் விவாதித்த பிறகே இது சரியான நேரம் என்று முடிவெடுத்தோம். இரண்டாவதாக, நான் தன்னம்பிக்கை கொண்டவன். பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க எப்போதும் தயார். சேப்பாக்கின் மெதுவான பிட்ச்சிற்கு எனது பேட்டிங் பாணி செட் ஆகாது என்று பலர் கூறினர். ஆனால், உனக்கு 30 வயதாகிறது, மைதானத்தில் இறங்கி அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடி என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அங்கு ஒரு புதிய ஆற்றலை உணர்ந்தேன்' என்றும் அவர் விவரித்தார்.
சிஎஸ்கேவில் இணைந்தவுடன் தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், 'சிஎஸ்கேவில் எனது முதல் 3 போட்டிகளில் நான் சரியாக ரன் குவிக்கவில்லை, அணியும் தோற்றது. உலகக் கோப்பை ஃபைனலில் விளையாடிவிட்டு வந்த எனக்கு, அந்த ஃபார்மை உடனடியாகத் தொடர முடியவில்லை. பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தோனி உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது அழுத்தம் இருப்பது இயல்பு. ஆனால், நான் 3 போட்டிகளில் தோற்றபோதும், அணி நிர்வாகமும் சக வீரர்களும் காட்டிய நம்பிக்கை ஒரு சதவீதம் கூட குறையவில்லை. அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது' என்றார்.
தோனியுடன் பேசிய அனுபவம் குறித்து சஞ்சு, '3 போட்டிகளுக்குப் பிறகு பயிற்சி மைதானத்தில் மஹி பாயைச் (தோனியை) சந்தித்தேன். அவர் என்னை நோக்கி 'நீ நலமாக இருக்கிறாயா?' என்று கேட்டார். நான் 'பையா, நான் நன்றாக இருக்கிறேன், ஆனால்…' என்று தடுமாறினேன். உடனே அவர், 'ஆனால் என்று யோசிக்காதே. நீ எதில் சிறந்தவனோ அதில் மட்டும் கவனம் செலுத்து. எல்லாம் சரியாக அமையும்' என்றார்.
'அது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. இதற்காக நான் எனது பேட்டிங் பாணியையோ, கூடுதல் 3 மணி நேர பயிற்சியையோ செய்யத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் சென்று கவலைப்படாதீர்கள், அடுத்த போட்டியில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினேன். அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் சதம் அடித்தேன். அங்கிருந்து வேகம் திரும்பியது' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 14 இன்னிங்ஸ்களில் 477 ரன்களை 43.36 சராசரி மற்றும் 165.63 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளாசினார். இதில் 2 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். எனினும், சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது.
