இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மஞ்ச்ரேக்கர், இந்திய அணியின் தோல்விகளுக்குக் காரணமான உண்மையானப் பிரச்சனையை சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், 'அயர்லாந்து, இங்கிலாந்து மண்ணில் தோல்வியடைந்ததற்காக கௌதம் கம்பீரையோ, கேப்டனையோ அல்லது சொதப்பிய வீரர்களையோ நீக்குவது மிகவும் எளிதான விஷயம். ஆனால், அது சரியான தீர்வு அல்ல. தோல்விக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
நமது வீரர்கள் வெளிநாட்டு ஆடுகளங்களுக்குத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை மட்டுமே அடிப்படையாக வைத்து வீரர்களைத் தேர்வு செய்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய மஞ்ச்ரேக்கர், 'ஐபிஎல் தொடரில் பளிங்குக்கல் தரை போன்ற பேட்டிங் ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு விளையாடுவது மிகவும் எளிது. ஐபிஎல் தொடரை மிகவும் பிரபலமாக்கவும், பார்வையாளர்களை ஈர்க்கவும் 200 ரன்களுக்கு மேல் விளாச வேண்டும் என்றும், அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கிய நபர்களைத் தான் முதலில் வேலையை விட்டுத் தூக்க வேண்டும்' என்று காட்டமாகக் கூறினார்.
அதை விடுத்து, வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடக் கூடிய சுப்மன் கில் போன்ற சாதுரியமான வீரர்களுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தான் இந்திய டி20 அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் பேசத் துவங்கிய நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதை இன்னும் விளக்கமாக விமர்சித்து இருக்கிறார்.
சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 142 ஆண்டில் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் மெகா வெற்றி. ஐபிஎல் என்றாலே சிக்ஸர், 200 ரன்கள் என பிசிசிஐ திட்டமிட்டதே தற்போது இந்திய டி20 அணியை மறைமுகமாக பாதித்து வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் அல்லது மந்தமான பவுன்ஸ் இருக்கும் பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணற காரணமே ஐபிஎல் பிட்ச்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

