சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3.75 பவுன் தாலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மனைவி ரேவதி (38). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில், ரேவதி தனது உறவினர் வீட்டின் அருகே வாசலில் தெளிப்பதற்காக சாணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஓமலூர் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர்.
ரேவதி அவர்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென ரேவதியின் கழுத்தில் இருந்த 3.75 பவுன் தாலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த ரேவதி, உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதிகாலையில் பெண்ணிடம் தாலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

