பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு மாணவர்களுக்கு எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிச்சர்ட்ஸ் டவுனில் அமைந்துள்ள இந்த பள்ளியில், பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், ஒரு பள்ளி ஊழியர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த திடீர் பாதிப்பு காரணமாக, பள்ளிக்கு செவ்வாய்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகமும் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வகுப்பறைகள், நடைபாதைகள், பேருந்துகள் மற்றும் மைதானங்களில் நீண்ட நேரம் ஒன்றாக இருப்பதால், இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் பள்ளிகளில் வேகமாகப் பரவக்கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் (H1N1) என்பது சுவாச நோயை உண்டாக்கும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் ஒரு துணை வகையாகும். இதன் அறிகுறிகள் சாதாரண பருவகால இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தகவல்படி, இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தலைவலி, சோர்வு மற்றும் தசை அல்லது உடல் வலிகள் ஆகியவை அடங்கும்.
சில குழந்தைகளுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், பள்ளி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அளித்து, வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காய்ச்சல் மற்றும் அது தொடர்பான அறிகுறிகள் குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

