தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.31.85 லட்சம் ரொக்கமும், சந்தேகத்திற்கிடமான ரூ.5.95 லட்சம் ஜிபே பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.37 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனையானது தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. குறிப்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிலவி வந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.