ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினால், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் மிக வயதான இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைக்க உள்ளார். இந்த போட்டி நாளை (சனிக்கிழமை, ஜூன் 13) தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதுள்ள தகவல்களின்படி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் மிக வயதான இந்திய வீரர் என்ற சாதனை மொஹிந்தர் அமர்நாத் வசம் உள்ளது. அவர் 1989 அக்டோபர் 30 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது அவருக்கு 39 வயது 36 நாட்கள். நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கினால், அவருக்கு 39 வயது 44 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் அமர்நாத்தின் 37 ஆண்டுகால சாதனையை அவர் முறியடிப்பார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற சாதனை நெதர்லாந்தின் நோலன் கிளார்க் (47 வயது 257 நாட்கள்) வசம் உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயின் ஜான் டிரைகோஸ் (45 வயது 312 நாட்கள்), இங்கிலாந்தின் நார்மன் கிஃபோர்ட் (44 வயது 361 நாட்கள்) ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத பட்சத்தில் இந்திய அணிக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், அவருக்கு மாற்றாக ஒரு வீரரை கொண்டுவர வேண்டும் என்றும் ரெய்னா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைப்பார். தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. அவர் 2012ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 49வது ஒருநாள் சதத்தை விளாசிய போது அவருக்கு 38 வயது 327 நாட்கள் ஆகும்.