இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், மைதானத்தில் மட்டுமல்லாமல் வரி செலுத்துவதிலும் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் 2025-26 நிதியாண்டில் அதிக வரி செலுத்திய தனிநபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் அவர் ரூ. 23.84 கோடி அளவுக்கு வரியாகச் செலுத்தியுள்ளார்.
28 வயதாகும் ரிஷப் பண்ட், உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தாலும், அவர் வசிப்பது உத்தரகாண்ட் மாநிலத்தில்தான். இதுகுறிப்பிடத்தக்க விஷயமாகும், ஏனெனில் கடந்த நிதியாண்டிலும் அவரே அந்த மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராகத் திகழ்ந்தார். கடந்த ஆண்டு அவர் ரூ. 10.5 கோடி வரியாகச் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட் இவ்வளவு பெரிய தொகையை வரியாகச் செலுத்தியதற்கு அவரது ஐபிஎல் வருமானமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஐபிஎல் 2026 சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் அவர் செய்துகொண்ட ரூ. 27 கோடி ஒப்பந்தம், அவரது வருவாய்க்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் வருவாயைத் தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒப்பந்தத்தின் மூலமும் ரிஷப் பண்டிற்கு கணிசமான வருமானம் கிடைத்துள்ளது. வரி மதிப்பீட்டுக் காலத்தில் பிசிசிஐ-யின் கிரேடு ஏ ஒப்பந்தத்தில் இருந்த அவர், ஆண்டுக்கு ரூ. 5 கோடி பெற்று வந்தார். இருப்பினும், பின்னர் அவர் கிரேடு பி ஒப்பந்தத்திற்கு மாற்றப்பட்டதால், அவரது ஆண்டு ஒப்பந்த மதிப்பு ரூ. 3 கோடியாகக் குறைந்தது.
ஐபிஎல் 2025 சீசனில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து போட்டி ஊதியமாக ரிஷப் பண்ட் ரூ. 1.1 கோடி பெற்றுள்ளார். இதில் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ. 8 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு தலா ரூ. 8 லட்சமும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
விளம்பரங்கள் மூலமும் ரிஷப் பண்ட் பெருமளவில் வருவாய் ஈட்டி வருகிறார். ஒரு நாள் விளம்பரப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் ரூ. 2.5 கோடி வசூலிக்கிறார். இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு ரூ. 4.5 கோடி முதல் ரூ. 4.75 கோடி வரை கட்டணமாகப் பெறுகிறார். இதன் மூலம் விளம்பர ஒப்பந்தங்கள் வாயிலாக மட்டுமே அவருக்கு ஆண்டுக்கு ரூ. 28 கோடி முதல் ரூ. 35 கோடி வரை வருவாய் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, அடிடாஸ், எஸ்ஜி, தம்ஸ் அப், கேட்பரி, போட், நாய்ஸ், சொமாட்டோ, ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட் மற்றும் மேக்மைடிரிப் போன்ற பல முன்னணி பிராண்டுகளின் விளம்பரத் தூதராக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். இந்த விளம்பரப் பணிகள் மூலம் அவரது வருவாய் மேலும் அதிகரித்துள்ளது.

