தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் காத்திருக்கிறது. அரிசி விலையில் கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மோட்டா ரக நெல் அதிகளவில் விளைகிறது. இதை பொது விநியோக திட்டத்திற்காக அரசு கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த அரிசி தேவை ஆண்டுக்கு 91 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், உற்பத்தி 75 லட்சம் டன் மட்டுமே. இதில் 5 லட்சம் டன் கேரளாவுக்கு செல்வதால், தமிழகத்தில் 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டைப் போக்க ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் டன் சன்ன ரக அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்தில் கர்நாடகாவின் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அங்கு சன்ன ரக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்திற்கான அரிசி வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கே.என்.எம். (KNM), ஆர்.என்.ஆர். (RNR) ஆகிய சன்ன ரக நெல் சுமந்த 200 லாரிகள் தினமும் தமிழகத்திற்கு வந்தன. ஆனால், தற்போது இந்த வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக காஞ்சிபுரம் அரிசி வியாபாரி தெரிவித்துள்ளார்.
இதனால், மொத்த விற்பனை சந்தையில் 1,150 ரூபாய்க்கு விற்கப்பட்ட 26 கிலோ சன்ன ரக அரிசி மூட்டையின் விலை தற்போது 100 ரூபாய் அதிகரித்து 1,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அரிசியின் விலை கிலோவுக்கு மொத்த விற்பனையில் 3 முதல் 4 ரூபாய் வரையிலும், சில்லரை விற்பனையில் 5 முதல் 7 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.