மத்தியப் பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயங்கர தீ விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் பரபரப்பு! திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் வரும் லூனி ரிச்சா மற்றும் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று அதிகாலை சுமார் 5:15 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பி1 ஏசி பெட்டி மற்றும் அதனுடன் இணைந்திருந்த சரக்குப் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தீயை கண்ட ரயில் காவலர் உடனடியாக ரயில் ஓட்டுநரை எச்சரித்துள்ளார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அவசர வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

ரயில்வே ஊழியர்களின் துரித நடவடிக்கையால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. ரயிலின் மேல்நிலை மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், தீப்பிடித்த பெட்டி தனியாகப் பிரிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து, சுமார் 15 நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த 68 பயணிகளையும் பத்திரமாக வெளியேற்றினர். முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள பெட்டிகளில் இருந்த பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாதிக்கப்பட்ட பெட்டியிலிருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெட்டி மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version