டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, 'கல்வி முறையின் சீர்குலைவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானே காரணம். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அவரே காரணம். காவல்துறையின் தாக்குதலில் ஒரு இளைஞரின் கண் பார்வை பறிபோயுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாணவர்களின் நியாயமான கோரிக்கை. மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை தாக்குவதையும், மிரட்டுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், அவர்கள் மீதான தடியடிக்கு மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், 'மாணவர்களின் 3 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போராடும் மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக்கூடாது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது' என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

