தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அம்புக்குறிகள்: ராகவா லாரன்ஸ் புகழாரம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் ஒரு மாத காலச் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை என நடிகர் ராகவா லாரன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த மதுபானக் கடைகளை மூடிய தவெக அரசின் முடிவை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

கல்வி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், புதிய அரசு முழுமையாகச் செயல்பட சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் லாரன்ஸ் கேட்டுக்கொண்டார். ஒரு புதிய வீட்டிற்குச் சென்றாலே அங்குள்ள சூழலுக்குப் பழக ஒரு மாதம் தேவைப்படும் நிலையில், புதிய ஆட்சிக்குக் கூடுதல் காலம் தருவதே முறை என்றும் அவர் உதாரணத்துடன் விளக்கினார்.

தவெக அரசு மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்குப் பின்னால் சிலரின் பொறாமை குணம் மட்டுமே இருப்பதாக லாரன்ஸ் சாடியுள்ளார். தவெக தொண்டர்களைச் சிலர் 'தற்குறிகள்' என்று கொச்சைப்படுத்துவதை மறுத்த அவர், அவர்கள் தற்குறிகள் அல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த 'அம்புக்குறிகள்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்த முடிவை விரைவில் ரசிகர்களின் முன்னிலையிலேயே அறிவிக்க உள்ளதாக அவர் கூறினார். அரசியலில் தனக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் நண்பர்களே என்றும், தனது அரசியல் முடிவை ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றே அறிவிப்பேன் என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தான் பணம் சம்பாதிக்கவோ அல்லது வெறுப்பு அரசியலை முன்னெடுக்கவோ வரவில்லை என்றும், தற்போது அறக்கட்டளை மூலம் நூறு பேருக்குச் செய்யும் உதவியை, அரசியல் அதிகாரம் கிடைத்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு விரிவுபடுத்த முடியும் என்ற நோக்கில் மட்டுமே செயல்படுவதாக உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version