2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடர்ச்சியான 6-வது தோல்வியை சந்தித்து பிளே-ஆப் வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, மைதானத்திலேயே உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் காரசாரமாக வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணியின் மோசமான ஆட்டத்தால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் அவர்களின் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சீசனின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் அணி, தற்போது தொடர்ச்சியாகப் போட்டிகளில் தோல்வியைச் சந்திப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, வெங்கடேஷ் ஐயர் (73 ரன்கள்) மற்றும் விராட் கோலி (58 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் சஷாங்க் சிங் (56 ரன்கள்) போராடினாலும், அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியானது.
போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மிகுந்த மனவேதனையுடன் தனியாக அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றம், அணியின் தற்போதைய நிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது. பல திட்டங்கள் வகுத்தும், அணி தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பது அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அதே சமயம், மைதானத்தில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் தீவிரமாக உரையாடினார். அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவுகள் குறித்து அவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். லீக் சுற்றின் முடிவில் மீண்டும் ஒருமுறை கோப்பையின்றி வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது ப்ரீத்தியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிமையாளர்கள் இவ்வாறு மைதானத்தில் வைத்து தோல்வி குறித்து விவாதிப்பது ஐபிஎல் தொடரில் சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், 'முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் எப்போதும் நேர்மறையாகவே இருப்பேன். இது எனது குணத்தை மாற்றிவிடாது. கடந்த காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இன்றைய போட்டி முடிந்துவிட்டது. நாளை மீண்டும் புதிய சூரிய உதயம் இருக்கும், இருண்ட சுரங்கத்தின் முடிவில் நிச்சயம் ஒளி இருக்கும்' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வென்று, மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளது.
