வரும் செப்டம்பர் மாதம் முதல் சோப், ஷாம்பு, பிஸ்கட் உள்ளிட்ட அன்றாட நுகர்வோர் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. அத்துடன், சர்க்கரை மற்றும் பாமாயில் போன்ற மூலப்பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இந்தச் சூழலில், தங்கள் லாப வரம்புகளைப் பாதுகாக்க நிறுவனங்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
கடந்த 2026-27 நிதியாண்டின் ஜூன் காலாண்டில், FMCG துறையில் சராசரியாக 2-5% வரை விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. மேலும், நிறுவனங்கள் பொருட்களின் எடையைக் குறைத்தல் அல்லது குறிப்பிட்ட பொருட்களின் விலைகளை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த விலை உயர்வு நடவடிக்கைகளில் எந்தெந்த நிறுவனங்கள் ஈடுபட உள்ளன என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிஸ்கட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிரிட்டானியா நிறுவனம், தனது பிஸ்கட் பாக்கெட்டுகளின் விலையைக் குறைக்காமல், அதே விலையில் எடையைக் குறைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகளில் பிஸ்கட் எடை மட்டும் குறையக்கூடும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் Surf Excel, Rin போன்ற சலவைத் தூள்கள்; Lux, Dove போன்ற குளியல் சோப்புகள்; Clinic Plus, Sunsilk போன்ற ஷாம்புகள் மற்றும் பற்பசைகள் ஆகியவற்றின் விலைகளையும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வுக்கு தயாராகும் மற்ற முக்கிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் Dabur மற்றும் Godrej Consumer Products ஆகியவையும் அடங்கும். இந்த நிறுவனங்கள், நடப்பு காலாண்டில் தங்களது குறிப்பிட்ட சில தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த உள்ளதாக தெரிகிறது.
Godrej Consumer Products Limited நிறுவனம், கடந்த ஜூன் காலாண்டில் சராசரியாக சுமார் 5% விலைகளை உயர்த்தியிருந்தது. தற்போது, நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் பருவமழை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் El Nino-வின் சாத்தியமான தாக்கம் போன்றவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
இந்த விலை உயர்வுகள் நுகர்வோரை நேரடியாக பாதிக்கும் என்பதால், இதுகுறித்து அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா அல்லது நிறுவனங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

