கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், சாலை வசதி இல்லாத கிராமப்புற மக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தொட்டிலில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் அமைந்துள்ள இடமலக்குடி கிராம மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றியும், கடுமையான சவால்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, சாலை வசதி இல்லாததால், அவசர மருத்துவத் தேவைகளுக்குக் கூட பல கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பருவமழை காலங்களில் இந்த நிலை மேலும் மோசமடைந்து, பாதைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றன. இந்த கிராமத்தில் வசிக்கும் 75 வயதான மலையப்பன் என்பவர், கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்த நிலையில், கிராம மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். வேறு வழியின்றி, கிராம மக்கள் மலையப்பனை ஒரு சேலையில் சுற்றி, மூங்கில் கம்புகளால் தொட்டில்போல் அமைத்து, தோள்களில் சுமந்து கடினமான காட்டுப்பகுதியை கடந்துள்ளனர். ஒருவர் மாற்றி ஒருவர் மாறி மாறி சுமந்து, சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள ஆணைகுளம் என்ற இடத்தை அடைந்துள்ளனர். அங்குள்ள சாலை வசதியைப் பயன்படுத்தி, ஒரு ஆட்டோவில் ஏற்றி அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நெஞ்சை உருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, இடமலக்குடி மக்களின் துயரமான வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏற்கனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவல நிலையைச் சரிசெய்ய, குடலார் குடி முதல் ஆணைகுளம் வரை சாலை அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை வசதி இல்லாததால் நோயாளியை தொட்டிலில் சுமந்து சென்ற மக்கள்!

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
