பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அவையில் இருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரவைக்கு வணக்கம் தெரிவித்து, "இது ஒரு மாண்புமிகு பேரவை. முன்னாள் முதல்வர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளனர். இப்போதைய முதல்வர், அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு திரையுலகில் அண்ணனாக விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்" என்று பேசினார்.

மேலும், "இந்தச் சபையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, இதே அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் வலியுறுத்துவார். அவர் கூறியது போல, சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். அனைத்துத் தரப்பு வாதங்களையும் சரிசமமாக ஒளிபரப்ப வேண்டும்" என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.

"இந்தத் தமிழ்நாடும் தமிழகமும் எப்போதும் சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் இனி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் பிறகே மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" எனவும் முதலமைச்சர் விஜயிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி, முதலமைச்சர் விஜய் நேற்று அனைத்து எதிர்கட்சிகளையும் நேரடியாகச் சென்று சந்தித்தது குறித்தும் பிரேமலதா பாராட்டினார். "இங்கு எதிர்கட்சிகள் என்பவை எதிரிக்கட்சிகள் அல்ல, அனைவரும் தோழமைக் கட்சிகள் தான் என்பதை மிகச் சிறப்பாகச் செய்து காட்டிய அன்புத் தம்பி முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார்.

மேலும், இந்த பேரவை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்பதையும் பிரேமலதா எடுத்துரைத்தார்.

அத்துடன், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அன்புத் தம்பி விஜய் அவர்கள் வெற்றி பெற்று, சிறப்பாக நம் நாட்டிற்குப் பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, தனது அன்பு கணவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேரவைக்கு நன்றி கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version