விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ஆம் தேதி, இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற முது முனைவர் வ.அய். சுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து ஓராண்டுக்குப் பிறகு கருத்து கூறுவதே சரியாக இருக்கும் என்றும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ததை வரவேற்பதாகவும் பழ. நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். தான் சினிமா பார்ப்பதில்லை என்பதால், 'ஜனநாயகன்' படம் குறித்து கருத்து கூற இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தான் கூறி வருவதாக அவர் கூறினார். உரிய நேரத்தில் அவர் நிச்சயம் வெளியே வருவார் என்றும், தற்போது அதற்கான சர்வதேச சூழல் சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பிரபாகரனின் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசியுள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த தகவல்களை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
