தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24), அரசு மதுபானக்கடையுடன் இணைந்த மதுபானக் கூடத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 17-ஆம் தேதி, அருணாச்சலம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தாளமுத்து நகர் காவல் நிலைய காவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர் அவரை 120 மதுபாட்டில்களுடன் கைது செய்தனர்.
தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர், அவரை சிறையில் அடைப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் தகுதி சான்றிதழ் பெற ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் அழைத்துச் செல்வதற்கு முன்பு, தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் அடைக்கப்படும் அறையில் மற்ற கைதிகளுடன் அவரும் வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல்துறையினர் சொந்த ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.
தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலத்திற்கு, பின்தலையில் ஏற்பட்ட காயத்தால் இரத்தக் கசிவு அதிகமாக இருந்ததால், கடந்த 21-ஆம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார்.
இதையடுத்து, அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அருணாச்சலத்தின் தம்பி சுடலைமணி, தனது அண்ணனுக்கு எந்த நோயும் கிடையாது என்றும், காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட காயமே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
'எனது அண்ணன் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த நோயும் கிடையாது. காவல் துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து எங்களுக்குத் தகவல் அளித்தனர். சொந்த ஜாமினில் காவல்துறையினர் அவரை விடுவித்தனர். தலையில் இருந்த காயம் காரணமாக இரத்தக் கசிவு அதிகமாக ஏற்பட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நன்றாக இருந்த எனது அண்ணன் திடீரென்று இன்று காலை உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார். இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். எனது அண்ணன் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். நீதித்துறை நடுவர் முன்னிலையில் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதில், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

