சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
இந்த நிழல் நிதிநிலை அறிக்கை 2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கானதாக இருக்கும் என்றும், இதன் மொத்த மதிப்பு ரூ.93,000 கோடி என்றும் அவர் தெரிவித்தார். இதில், வேளாண்துறைக்கு ரூ.68,000 கோடியும், பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடியும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடுகையில், பாமகவின் ஒதுக்கீடு 446 சதவீதம் அதிகமாகும். வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில், ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கும், ரூ.25,000 கோடி வேளாண் கட்டமைப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும், ரூ.30,000 கோடி பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கும் செலவிடப்படும்.
தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கையில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, நடப்பாண்டின் ரூ.6 லட்சம் கோடி நிதிநிலை மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடியை வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளுக்காக மேலும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் பாமக தெரிவித்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கான கூடுதல் செலவைக் கருத்தில் கொண்டு, ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும். மேலும், நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
பாமகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்ட இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே நேரடியாக செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது, ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும். உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும். நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும். கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், மேலும் 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்க, உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000 ஆக உயர்த்தப்படும்.
காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி பரப்பை தற்போதுள்ள 1.25 லட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்த வேண்டும். துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும். நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும். நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக அரசால் பாதுகாக்க முடியவில்லை என்றும், தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

