பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்ற விசிகவை திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சமூகவலைதளத்தில் அவதூறாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, விசிகவினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பேருந்து நிலையத்தில் திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெரம்பலூரில் திமுக – விசிகவினர் இடையே நேற்று நடந்த மோதல் தொடர்பாக மொத்தம் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.