சென்னை விமான நிலையம் அருகே அமையவிருந்த ரூ.27,500 கோடி மதிப்பிலான பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறும் அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கனவுத் திட்டமாக கருதப்பட்ட இந்த பசுமை விமான நிலையத் திட்டத்திற்காக மத்திய அரசு ₹27,500 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கியிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5,846 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 1,802 ஏக்கர் நிலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் இந்த நில ஆர்ஜிதங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
தொழிற்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், இடங்களைத் தேர்வு செய்யும்போது பெருநகரங்களுடனான இணைப்பு, எதிர்கால வளர்ச்சி, துறைமுகங்கள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதும், நிலத்தின் மீதான மக்களின் பற்றுதலும் காரணமாக நில ஆர்ஜிதங்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பது நாடு முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனையாகும்.
தற்போது விமானப் பயணம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான போக்குவரத்து முறையாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் 90% மக்கள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை விமான நிலையம் என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான முக்கிய மையமாக விளங்குவதோடு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு முக்கிய இடமாக அமையும்.
இந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் ரத்து செய்து அறிவித்துள்ளார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அந்த மக்களைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 75% நில ஆர்ஜிதம் முடிந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்வது, தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டத்தை நழுவ விடுவதாகும் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India – AAI) ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தால் கூட இந்த ரத்து ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால், மாற்று இடம் கூட தேர்வு செய்யப்படாத நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏற்புடையதல்ல. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகியவை தமிழக எல்லையிலேயே போட்டி போட்டுக்கொண்டு புதிய விமான நிலையங்களைக் கட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையில் கட்டப்படவிருந்த விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது, சர்வதேச தொழில் முதலீடுகளுக்கும் வளர்ச்சிக்கும் தவறான சமிக்ஞையை அனுப்பிவிடும். இதுபோன்ற விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வர குறைந்தது 10 வருடங்கள் ஆகும். பரந்தூரை ரத்து செய்துவிட்டு, தற்போதுள்ள சென்னை விமான நிலையம் அருகே நீர்நிலைகள் இல்லாத, விவசாயம் செய்ய முடியாத 5,000 ஏக்கர் தரிசு நிலங்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டத்தைப் போல் இங்கும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால், எந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியும்? தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கனவுத் திட்டமான ₹27,000 கோடி பசுமை விமான நிலையத் திட்டம் வெறும் கனவாகவே போய்விடாதா? இதுபோன்ற ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சியினர் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்தாலோசித்து ஒரு சரியான முடிவை எடுத்திருக்கலாம். 'நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன்; அதைக் காப்பாற்றுவேன்' என்பதற்காக முதலமைச்சர் விஜய் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது நியாயமாகத் தெரியவில்லை. அவர் இதில் மறுபரிசீலனை செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என கிருஷ்ணசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
