சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாமக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று சென்னையில் தொடங்கப்பட்டது.
சென்னை, தி. நகர் பாண்டி பஜாரில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை அன்புமணி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "இளைஞர்களே..!! ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்தீர்கள்.. இந்த பள்ளிக்கரணையை நேரில் சென்று பாருங்கள்.. குப்பைகளை எரிப்பதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுங்கள்" என்று மாணவர்களை ஊக்குவித்தார்.
"முன்பு 15,000 ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது வெறும் 2500 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஒட்டுமொத்த வேளச்சேரி பகுதியே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் வாழ்வதற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் உள்ள 26,800 ஏக்கர் ஈர நிலத்தை மறுவரையறை செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள Wet Land Committee தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"கடந்த ஆட்சியில் CMDA பொறுப்பில் இருந்த சேகர்பாபு போன்ற அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்தால் சென்னை இன்னும் நாசமாகத்தான் போகும். சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம், நேரு ஸ்டேடியம் போன்ற முக்கிய கட்டிடங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை" என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.
"தமிழ்நாட்டில் சதுப்பு நில ஆணையம் ஒன்று உள்ளது. ஆனால் அது எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் ஏரிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை ஒரு வேலையாக வைத்திருந்தனர். அவர்களுக்கு ஏரி, குளங்கள், நீர்நிலைகள் குறித்த புரிதல் இல்லை" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த சதுப்பு நிலம் இல்லையென்றால், சென்னையில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது" என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.
இந்த கையெழுத்து இயக்கம் மூலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாமக திட்டமிட்டுள்ளது. இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த பதிவுகளை பகிரவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

