வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள், தடைகள், குடும்ப சண்டைகள், வருமானம் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு, கர்ம வினைகளே காரணம் என நம்பப்படுகிறது. இந்த கர்ம வினைகளைக் குறைக்க முருகப்பெருமானுக்கு மாபெரும் சக்தி உண்டு. குறிப்பாக, பழனி மலைக்குச் சென்று தண்டாயுதபாணியை தரிசித்தால் நம்முடைய கர்ம வினைகள் நிச்சயம் குறையும் என்பது ஐதீகம்.
கர்ம வினைகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீர, பழனி முருகனை எப்படி வழிபாடு செய்வது என்ற 'தேவரகசியம்' பலருக்கும் தெரிவதில்லை. வாழ்க்கையில் தடை, பொறாமை, கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக, ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவரை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்.
பலரும், 'ஆண்டி கோல முருகனை கும்பிட்டால் ஆண்டியாகி விடுவோம், ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் மட்டுமே ராஜ வாழ்க்கை கிடைக்கும்' என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால், உங்கள் வாழ்க்கையில் தீராத துயரங்களையும், அதிகப்படியான தடைகளையும் அனுபவித்து வந்தால், பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில், அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பதுதான் மிகவும் சிறந்தது.
முற்றும் துறந்த தவ நிலையில், எந்த அலங்காரமும் இன்றி ஆண்டிக் கோலத்தில் முருகனை தரிசிக்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும். பெரிய ஞானிகள்கூட அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். குடும்பத்தில் பல இன்னல்களைக் கடந்து வந்தவர்கள், முற்றும் துறந்தவர்கள் இந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.
ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது, செவ்வாய் கிரகம் முருகனுக்கு உரியது. பழனி முருகன் ஞானகாரகனாகவும் இருக்கிறார். இந்தச் செவ்வாயுடன் குருவும் கலந்திருக்கிறார். வீரம், தைரியம் ஆகியவற்றிற்கு உரிய செவ்வாயின் அம்சமும், ஞானத்தின் அம்சமும் இங்கு ஒருங்கே அமையப்பெற்றுள்ளன. இந்த வீரமும் தைரியமும் இருந்ததால்தான், எல்லாவற்றையும் உதறிவிட்டு அவர் இங்கு நிற்க முடிந்தது.
வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளவர்கள், மனக் குழப்பத்தில் இருப்பவர்கள் என அனைவரும் அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகனை வணங்குவது நன்மையளிக்கும். 20 வருடங்களாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போனாலும், இந்த ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார்.
மன உளைச்சல், மன எழுச்சி, பேச்சு குறைபாடு உள்ளவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கோலத்தைப் பார்த்தால், அவர்களின் மனதில் ஒருவித சாத்வீகமும் சமத்துவமும் பரவும். 'நம்மால் முடியாது, மருத்துவர்களாலும் முடியாது' என்று நினைக்கும் விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக உகந்த தரிசனக் கோலமாகும்.
திங்கட்கிழமை காலை வேளையில் பழனிக்குச் சென்று மலையேறி, முருகப்பெருமானை ஆண்டிக் கோலத்தில் தரிசித்தால், வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி, படிப்படியான முன்னேற்றமும் மாற்றமும் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் பாதிப்பைத் தரக்கூடிய கிரகங்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும், இந்த தரிசனம் உதவும். மேலும், பூஜை, தானம், தர்மம், அன்னதானம் போன்றவற்றைச் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றமும் நன்மைகளும் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கையோடு இதைச் செய்து நலமடையுங்கள்.

